திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.104 திருப்பருதிநியமம் பண் - பழம்பஞ்சுரம் |
விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.
|
1 |
அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்
நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிந் நியமமே.
|
2 |
வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.
|
3 |
வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே.
|
4 |
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதிந் நியமமே.
|
5 |
வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிந் நியமமே.
|
6 |
பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே.
|
7 |
ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிந் நியமமே.
|
8 |
நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.
|
9 |
கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிந் நியமமே.
|
10 |
பையர வம்விரி காந்தள்விம்மு பருதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |